ஆளுநர் ஆர். என். ரவி, “சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என தெரிவித்த கருத்துக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதிலடி அளித்துள்ளார். அவர், “ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வந்து நேரில் பாருங்கள்” என்று ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மேயர் பிரியாவிடம், “வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என ஆளுநர் கூறியுள்ளதைப் பற்றிய கருத்து கேட்டபோது, அவர் கூறியவை,
சென்னை பாதுகாப்பான நகரமா? மேயர் பிரியா கூறியதாவது: “சென்னை மாநகராட்சி பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் மற்ற நகரங்களை ஒப்பிடும்போது, சென்னையே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.”
மேலும், “சென்னை மாநகராட்சியில் ‘ஜெண்டர் & பாலிசி லேப்’ என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், பெண்கள் எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள், அவர்கள் எத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பன குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டாக, இந்த ஆய்வின் மூலம் பெண்கள் பயன்படுத்தும் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
“தமிழக முதல்வர் இன்று பெண்களின் நலனுக்காக ஆட்சி செய்து வருகிறார். ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வராமல், தேவையில்லாத விமர்சனங்கள் செய்வதை விட்டுவிட்டு, தமிழகத்தில் பெண்களுக்கு முன்னுரிமையாக அரசு எவ்வளவு உழைக்கிறது என்பதை நேரில் வந்து பாருங்கள்” என்று ஆளுநர் ரவியை கேட்டுக்கொண்டார்.
“பெண்களுக்கான திட்டங்கள் எந்தளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன? அதன் பயனாளிகள் எவ்வளவு பேர்? என்பதை நேரில் பாருங்கள். பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக தமிழக அரசு அமைத்துள்ள பல்வேறு திட்டங்களை நேரடியாக பார்வையிட்டு, பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும்” என அவர் கூறினார்.
ஆளுநர் ரவியின் கருத்து முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரை ஒட்டிய பொடவூர் பகுதியில், அகில இந்திய மகளிர் சங்கத்தின் 93வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்த ஆளுநர் ரவி, “சென்னை பாதுகாப்பான நகரமாக இல்லை” என கூறினார்.
“பட்டமளிப்பு விழாக்களில் என்னை சந்திக்கும் மாணவிகள், ‘சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இல்லை’ என பெற்றோர்கள் கூறுவதாகவும், சென்னைக்கு அனுப்ப தயங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
ஆளுநர் ரவியின் கருத்துக்கு மேயர் பிரியா கடுமையான பதிலடி அளித்துள்ளார்.
Leave feedback about this