சென்னை

சென்னையில் கடும் பனிமூட்டம்! விமான சேவைகள் பாதிப்பு – மக்கள் அவதி!

சென்னையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர பகுதிகளில் பனி சூழ்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பனி போர்த்தி காணப்பட்டன.

இதனால், பனிமூட்டம் குறையும்வரை வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி மிகவும் கவனமாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காலை 7 மணி ஆகியும், பனி இன்னும் இருந்ததால், செங்கல்பட்டிலிருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

பனிமூட்டத்தின் காரணமாக சென்னை விமான நிலையத்திலும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாகின. அதோடு, 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து புறப்பட இருந்த 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image