இந்தியா

“தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு எப்போது செயல்படும்?” – நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் போராட்டம்!

தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக்கோரியும், அவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதி, தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதுவரை இந்தப் பிரச்சனைக்கான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். “தமிழகத்துக்கு நிதி வேண்டும், தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும்” என்ற பதாகைகளுடன் எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

இந்த போராட்டத்தின் போது, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேசியதாவது:

“தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து துன்புறுத்தி வருகிறது. தற்போது 97 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதி வருகின்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”

“நமது மீனவர்களின் 210 படகுகள் இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் படகுகள் இல்லாமல் எப்படி மீன்பிடிக்க செல்ல முடியும்? அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.”

“மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சனையை தீர்க்க குழுக்களை அமைப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழக மீனவர்களின் உயிர்க்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இந்த போராட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு முன்வந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக அரசும், மீனவர் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image