ஸ்வீடனில் உள்ள ஒரிபுரோ நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை திடீரென நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடங்கிய விதம் பயங்கரமானது. காலை நேரம் பள்ளியில் நடமாடிக் கொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் திடீரென துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான நிலையில், அங்கிருந்தோர் உயிரிழக்காமல் தப்பிக்க போராடினர். சம்பவம் தொடங்கியவுடன், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த தாக்குதலை நடத்தினாரா அல்லது ஏதேனும் மன அழுத்தம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் பயங்கரவாத அங்கிகாரம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை தெரிவித்தார். அவர் கூறியதாவது: “இது அனைவருக்கும் வேதனையான நாள். சாதாரணமாக இருக்க வேண்டிய பள்ளி நாள், இன்று உயிருக்கு பயந்து மாணவர்கள் தப்பித்துக் கொள்ளும் கொடூர நாளாக மாறியுள்ளது.” எனத் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான நேரத்தில் பள்ளியில் இருந்த ஒருவர், “நாங்கள் வகுப்பறையில் இருந்த போது, யாரோ ஒருவர் உள்ளே நுழைந்து அனைவரும் வெளியே செல்லுமாறு கூச்சலிட்டார். அதைத் தொடர்ந்து, பள்ளியின் நடைபாதையில் இருந்தபோது இரண்டு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. அதிர்ச்சியில் ஓடிக் கொண்டே வெளியேறினோம்.” என்று தெரிவித்தார்.
தற்போது, இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன? தாக்குதல் நடத்திய நபர் எந்த காரணத்தால் இந்த பயங்கரச் செயலில் ஈடுபட்டார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம்
பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி – ஸ்வீடனை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!
பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி – ஸ்வீடனை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!
- February 5, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this