தமிழகம்

“பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லையா? – ஆசிரியர்களின் அத்துமீறலால் அதிர்ச்சியில் பெற்றோர்கள்!”

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை இலக்காகக் கொண்டு நடந்துகொள்வது, கல்வி நிலையங்களில் பாதுகாப்பு குறைவதை வெளிக்கொணருகிறது.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, சமூக ஆர்வலர்கள் மீது தாக்குதல், உயர் அதிகாரிகளுக்கே கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள், இந்த அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுவதாக அவர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கூற்று எவ்வளவு உண்மை? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களால் மாணவிகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மாணவி கருவுற்று, கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

திருச்சி மணப்பாறை தனியார் பள்ளியில், 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் ஓமலூர் அரசு பள்ளியில் +1 மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் வன்முறை நடத்தியதாகக் கூறி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி ஓசூர் அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பள்ளியில் படிக்கும் மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.


இந்த சம்பவங்கள், ஒரே வாரத்திற்குள் நிகழ்ந்தவை என்பதே பெற்றோர்களை மேலும் உள்மன அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கல்வி பெண்களுக்கான முன்னேற்ற பாதையாக இருக்க வேண்டிய நிலையில், பள்ளியிலேயே ஆசிரியர்களால் மாணவிகள் பாதிக்கப்படுவதால், பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்புவார்களா என்பதே அவர்களின் பெரும் கவலையாக மாறியிருக்கிறது.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் வன்முறைக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால், செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, அரசின் நடவடிக்கைகள் போதுமா? என்ற கேள்வி எழுகிறது. பல வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்கிறார்களா? மாணவிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதா? போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது போலீசாரே முறையாக நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்ந்தால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படக்கூடிய சூழல் உருவாகலாம். கல்வித் தரத்தை உயர்த்துவதாக அரசுகள் பல திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால், மாணவிகள் பள்ளிக்கே செல்ல அச்சப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் எவ்வாறு உண்டாகும்?

தமிழக அரசு, பெண்களின் பாதுகாப்பு உறுதியாக இருக்க வேண்டும் என அறிவிக்கிறது. ஆனால், நடைமுறையில் பாதுகாப்பு குறைந்தபடியே தொடர்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க அரசின் திட்டங்கள் மட்டும் போதாது; உரிய கண்காணிப்பும், கடுமையான தண்டனையும் அமல்படுத்தப்பட வேண்டும்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image