தமிழகம்

“சீமான் மீது தொடர் வழக்குகள் – கைது செய்யப்படுவாரா? அமைச்சர் ரகுபதி விளக்கம்!”

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சமீபத்தில் வெளியிட்ட கருத்துகள் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. அவரின் கருத்துக்களை எதிர்த்து திராவிட கழகம், திமுகவினர், பெரியார் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டின் பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் அளித்துள்ளனர். இதனால், சீமான் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த சூழலில், “சீமான் மீது பல புகார்கள் இருப்பதால் அவர் கைது செய்யப்படுவாரா?” என்ற கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து பேசும் போது, “ஒருவரின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துவிட்டால், நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கை தொடரலாம். இதற்காக அவரை கட்டாயமாக கைது செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. கைதும் செய்யலாம், விட்டுவிடவும் முடியும். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் குற்றவாளி அல்ல, அவதூறாக பேசவில்லை என்பதைக் நிரூபிக்க வேண்டும்,” என்று கூறினார்.

மேலும், “ஒருவருக்கு எதிராக பல புகார்கள் இருப்பதாலும், சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நீதிமன்றமே முடிவெடுக்கும். இதற்காக மீண்டும் மீண்டும் கைது செய்ய முடியாது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்,” எனவும் அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சி தலைவராக இருக்கும் சீமான், திமுகவுக்கு கடும் எதிர்ப்பாக செயல்பட்டு வருவதுடன், திராவிட இயக்கத்தின் முக்கிய கோட்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அவர் பெரியாரைப் பற்றிய கருத்துகளை முன்வைத்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமான் மீது வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், சில பெரியார் ஆதரவாளர்கள், சென்னையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டு, அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய சீமான், “உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும், நான் அவரை ஏற்கமாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, திராவிட இயக்க ஆதரவாளர்களிடையே சீமான் மீது எதிர்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், பெரியார் குறித்த சீமான் கூறிய கருத்துகள், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால், இந்த விவகாரம் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image