மராட்டிய மாநிலம் புனேவில் ‘கில்லான் பாரே சின்ட்ரோம்’ (ஜி.பி.எஸ்.) என்ற குறும்போர் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கான முக்கிய காரணியாக அசுத்தமான குடிநீர் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுவரை 130க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜி.பி.எஸ். நோய் ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பை தாக்கி, உடல் உறுப்புகளின் இயக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் தசை பலவீனம் ஏற்படும். அதன்பிறகு உடல் உறுப்புகள் செயலிழந்து, கடைசியில் உயிரிழப்பு வரை ஏற்படும் அபாயம் உள்ளது.
தொற்று காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சோலாப்பூர் பகுதியில் 40 வயது பட்டய கணக்காளர் ஒருவர் ஜனவரி 26-ம் தேதி உயிரிழந்தார். புனேவில் 56 வயது பெண் புதன்கிழமை மரணமடைந்தார். 36 வயதான டாக்சி டிரைவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவரை ஜனவரி 21-ம் தேதி யஷ்வந்த் ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் கடுமையான சுவாச பிரச்சனை காரணமாக உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணமாக ஜி.பி.எஸ். தொற்றுடன் சேர்ந்து நிமோனியாவும் காரணமாக இருக்கலாம் என பிம்பிரி சிஞ்வாட் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் புனே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக சுத்தமான குடிநீரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புனேவில் ‘ஜி.பி.எஸ்.’ நோய் பரவி அச்சம் – டாக்சி டிரைவர் உயிரிழப்பு, 130 பேர் பாதிப்பு!
