புதுக்கோட்டை மாவட்டம்

“கனிமவள கொள்ளையை ஒடுக்க முயன்றதால் கொலை? – ஜகபர் அலி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிரடி ஆய்வு!”

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான ஐந்து பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொலை தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பிற தடயங்களை சேகரிப்பதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கோனாபட்டு அஞ்சல் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் என்பவரின் மகன் ஜகபர் அலி, முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்ததோடு, சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வந்தார். திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிமவள கொள்ளை நடப்பதாக அவர் ஆதாரங்களுடன் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, ஜகபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மரணம் ஒரு சாதாரண விபத்து அல்ல, திட்டமிட்டக் கொலை என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அவரது உறவினர்கள் முறையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில் முதலில் நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கனிமவளக் கொள்ளையை தடுத்ததற்காகவே ஜகபர் அலி கொல்லப்பட்டதாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடுமையாக குற்றம் சாட்டினர். இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அவரது உடற்கூராய்வு முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மேலும், இதுவரை கைதான முருகானந்தம், காசிநாதன், ராசு, ராமையா, தினேஷ் ஆகிய ஐந்து பேரை புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு தற்போது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மூன்று நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில், கொலை வழக்கில் கைதானவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொலை தொடர்பாகவும் கனிமவள கொள்ளை தொடர்பாகவும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணை முக்கிய முறைகேடுகளை அம்பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image