பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சந்திப்பு நடத்திய தகவல்கள் வெளியானதில் இருந்து, அவரது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தைச் சிறிதும் தவறவிடாமல், திமுகவும், பாஜகவும் தவெக மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
திமுக அமைச்சர் சேகர் பாபு, இந்த விவகாரத்துக்கு பதிலளிக்கையில், “தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு பயன் இருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“மக்களை நேரில் சந்தித்தால் அவர்கள் பிரச்சனையைச் சொல்வார்கள். அதுதான் அரசியல். ஆனால், ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு தேர்தல் வியூக நிபுணர்களின் ஆலோசனையை கேட்பது என்ன அரசியல்? மக்களை சந்தியுங்கள், தெருவில் நில்லுங்கள். மக்கள் ஒவ்வொருவரும் அரசியல் வியூக நிபுணர்களாகத்தான் இருக்கிறார்கள். தேர்தல் வியூக நிபுணரை வைத்து வெற்றி பெறலாம் என்று நினைத்தால், வருங்காலத்தில் மக்கள் அவர்களுக்கு பதில் சொல்லுவார்கள்,” என அவர் எச்சரித்தார்.
பிரசாந்த் கிஷோர் குறித்து பாஜகவினர் விமர்சிக்கின்ற போதிலும், கடந்த காலத்தை மறக்க முடியாது.
2011ம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் “Indian Political Action Committee” (IPAC) தேர்தல் வியூக ஆலோசனைகளை பின்பற்றியதன் மூலம், நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, 2014 நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் அமைத்த வியூகம், பாஜகவிற்கு அபார வெற்றியை தேடிக்கொடுத்த முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இப்போது, பாஜக “மக்களுடனே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்” என கூறுகிறது. ஆனால், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுகவின் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரின் IPAC குழுவை பணி புரிய வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
தவெகவினர், இதை வைத்து “திமுக ஏன் 2021ம் ஆண்டு கோடிகளை கொடுத்து பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்தது?” என்று கேள்வி எழுப்பினர்.
“திமுகவினர் இன்று பிரசாந்த் கிஷோர் குறித்து விமர்சிப்பதற்கு முன்பு, அவர்கள் 2021 தேர்தலின் போது பிரசாந்த் கிஷோரின் கீழ் செயல்பட்ட “IPAC” குழுவை வைத்து தேர்தல் வியூகம் அமைத்ததை மறந்துவிட்டார்களா?” என்று தவெகவினர் நேரடி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், தற்போது திமுகவின் தேர்தல் வியூக குழு “PEN” என்ற பெயரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தலைமையில் செயல்பட்டு வருவதாகவும், அதே IPAC பாணியில் திமுகவிற்கு ஆதரவான வியூகங்களை மேற்கொண்டு வருவதாகவும் தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் தொடர்பான விஜயியின் முடிவு எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகம்
“பிரசாந்த் கிஷோர் பற்றி பேசும் திமுக – 2021ல் கோடிகளை கொடுத்து ஒப்பந்தம் செய்ததை மறந்துவிட்டதா?!”
“பிரசாந்த் கிஷோர் பற்றி பேசும் திமுக – 2021ல் கோடிகளை கொடுத்து ஒப்பந்தம் செய்ததை மறந்துவிட்டதா?!”
- February 12, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this