சென்னை

“அண்ணாமலை அதிரடி பேச்சு: ‘தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்காது!’ – தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது!”

தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து, சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார்.

அண்ணாமலை கூறியபோது, மதுரை அருகே அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி ரத்து செய்யப்பட்டதற்காக மக்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில், மாநில அரசு ஏலத்துக்கு காரணமாக இருந்தாலும், மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது என்றும், இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் பிரதமர் நரேந்திர மோடி என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு பற்றிய கருத்தில், சென்னை ஈ.சி.ஆர். பகுதியில் தி.மு.க. கொடி பொருத்திய காரில் இளைஞர்கள், இளம்பெண்களை விரட்டும் வீடியோ காட்சி பதைபதைக்க வைக்கும் என கூறி, அது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதற்கு, முக்கிய எடுத்துக்காட்டு என்றும் குற்றம்சாட்டினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் “தி.மு.க. 7-வது முறையாக ஆட்சி அமைக்கும்” என கூறுவது பகல் கனவு என்றும், நாடக கம்பெனி போல செயல்படுவது என அவர் விமர்சித்தார்.

பெரம்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில், பள்ளி மாணவியைக் காப்பாற்றியவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமிழக காவல்துறை மற்றும் சட்ட அமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“தி.மு.க. ஆட்சி மீண்டும் வரப்போவதில்லை” என உறுதியாகக் கூறிய அண்ணாமலை, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்றும், மக்கள் விரைவில் தி.மு.க. அரசை நிராகரிக்கப் போகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image