டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பான அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
டெல்லியின் முக்கிய தொகுதிகளில் போட்டி நிலவரம். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி, மற்றும் முக்கிய தலைவர்களான மனிஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிப்பதால், டெல்லியில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், பாஜக முன்னிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
“டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமேயானால், அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த தேர்தல் முறையாக நடந்ததா? அல்லது அதில் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்பட்டதா? என்ற ஐயத்தை எழுப்பும் விதமாக தேர்தல் முடிவுகள் அமைகின்றன.
இந்தியா கூட்டணி தற்போது கட்டுகோப்பாக இல்லை. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படாததால் இந்த தேர்தலில் பாஜக பலமான முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதை கணக்கில் கொண்டு, இதற்கான சரியான தீர்வை காண வேண்டும்.
இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள், தங்களது தனிப்பட்ட அரசியல் ஈகோ பிரச்சினைகளை தாண்டி, நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தல்களிலும் அவசியமாக இருக்கிறது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாகியுள்ளது. டெல்லியில் பாஜக வெற்றி பெறுமா, ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தீர்மானிக்கப்படவுள்ள நிலையில், தேசிய அளவிலான அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்து பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தியா
“டெல்லியில் பாஜக புயல்: ஆம் ஆத்மியின் பின்னடைவு அதிர்ச்சி – இந்தியா கூட்டணிக்கு திருமாவளவன் எச்சரிக்கை!”
“டெல்லியில் பாஜக புயல்: ஆம் ஆத்மியின் பின்னடைவு அதிர்ச்சி – இந்தியா கூட்டணிக்கு திருமாவளவன் எச்சரிக்கை!”
- February 8, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this