இந்தியா

“உப்புமா வேண்டாம், பிரியாணியும் கோழியும் வேண்டும்!” – பால்வாடி மழலை வீடியோ வைரல், அரசின் பதில் என்ன?

கேரள மாநிலத்தில் தேவிகுளம் கிராமப் பஞ்சாயத்தில் செயல்படும் அங்கன்வாடி ஒன்றில் சிறுவன் த்ரஜன் (அழைக்கப்படும் பெயர் ஷங்கு) தனது அம்மாவிடம், அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவை மாற்ற வேண்டும் என்று மழலைக்குரலில் கோரிக்கை வைத்தார். “உப்புமா வேண்டாம், பிரியாணியும் பொரித்த கோழியும் வேண்டும்” என்று அவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குழந்தையின் பேச்சு மனதைக் கறையச் செய்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துடன் கூடிய உணவை வழங்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் குழந்தையின் உணவு பற்றிய கோரிக்கை, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பலரும் அங்கன்வாடிகளில் உணவு பட்டியலில் மாற்றம் செய்ய முடியுமா என்பதை விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த வீடியோ தொடர்பாக கேரள மாநில சுகாதார மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “த்ரஜன் வைத்த கோரிக்கை அரசு கவனத்தில் எடுத்துள்ளது. ஏற்கனவே நமது அங்கன்வாடிகளில் முட்டையும் பாலும் வழங்கப்பட்டு வருகிறது. சிறுவன் கேட்ட பிரியாணி கோரிக்கையை அரசு பரிசீலித்து, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார். குழந்தையின் அன்பான கோரிக்கையை அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைக் காத்திருந்து பார்ப்பது அனைவருக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version