மதுரை

“அரிட்டாபட்டி மக்கள் போராட்ட வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து!”

மதுரை மாவட்டம் மேலூரை ஒட்டிய அரிட்டாபட்டி பகுதியில் உள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக அரிட்டாபட்டி கிராம மக்கள் முன்னெடுத்த போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த சுரங்கத் திட்டம் அவர்களது வாழ்க்கைமுறையையும், சுற்றுச்சூழலையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். தூத்துக்குடி வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதன் பின் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு அரிட்டாபட்டி பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தலத்தை அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த திட்டம் அப்பகுதியில் இயற்கை வாழ்வியல் அமைப்பை பாதிக்கும் என எதிர்ப்பு அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் முதலமைச்சராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி நடந்தால் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என உறுதியளித்தார். அவரது உறுதி மற்றும் தொடர்ந்த போராட்டங்களின் காரணமாக மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

திட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை மேலூர் அருகே உள்ள வள்ளாலப்பட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் அரிட்டாபட்டிக்கு சென்று மக்களுடன் நேரில் சந்தித்து உரையாடினார்.

மக்களின் போராட்டம் வெற்றி கண்ட நிலையில், இனி அத்தகைய சுற்றுச்சூழல் பாதிக்கும் திட்டங்கள் அரிட்டாபட்டியில் மேற்கொள்ளப்படக்கூடாது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இதற்காக, இந்த பகுதியை பல்லுயிர் புராதனச் சின்னமாக, பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு  அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image